
மதுரை: மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், புதியவர்கள் தேர்வு வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதனால், பதவிகளை எதிர்பார்த்த கவுன்சிலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த வாசுகி, சரவண புவனேஷ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகிய 5 பேர் மண்டலத் தலைவர்களாக இருந்தனர். இவர்களில் வாசுகி அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவாளராகவும், சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா மாநகர திமுக செயலாளர் கோ.தளபதி ஆதரவாளர்களாகவும், பாண்டிச்செல்வி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளராகவும், சுகிதா புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் ஆதரவாளராகவும் செயல்பட்டனர்.