
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மதுரையில் இன்று (ஜூலை 10) மாலை ஆடு-மாடுகளின் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,
1. வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006 மேய்ச்சல் சமூக மக்களுக்கு வழங்கியுள்ள வன மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும்.
2. தமிழகம் முழுவதும் உள்ள மேய்ச்சல் தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
3. கிடை ஆடு, மாடுகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளை ஆவணப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்.
4. தமிழ்நாடு முழுவதும் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கிடை ஆடு, கிடை மாடு, எருமை, வாத்து மேய்ப்போருக்காகத் தனியாக, தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (Tamilnadu Pastoral Economic Development Board) அமைத்திட வேண்டும்.
5. நாட்டின ஆடு, மாடுகளைப் பாதுகாக்க அவற்றை வளர்க்கும் மக்களுக்குத் தனியாகச் சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
6. கால்நடைகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் மக்களின் உரிமைக்கும் உடைமைப் பாதுகாப்பிற்கும் வலசைச் செல்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
7. இடி, மின்னல், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்படும் மேய்ச்சல் சமூக மக்கள் மற்றும் அவர்களின் கால்நடைகளுக்குத் தனியாகக் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
8. சிப்காட் போன்ற திட்டங்களுக்கு மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

9. தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டு இயற்கையான மேய்ச்சல் காடுகள் அழிக்கப்பட்டு, 75,000 ஹெக்டேருக்கு அதிகமான வன நிலங்கள் தைல மரம் உள்ளிட்ட வணிக மரங்கள் நடப்பட்டதை மாற்றி மீண்டும் இயற்கை காடுகளை உருவாக்க வேண்டும்.
10. கிடாய் முட்டு, சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு போன்ற கால்நடை சார்ந்த பாரம்பர்ய விளையாட்டுகளைத் தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும்.
11. கால்நடைத் துறை மருந்தகங்களில் தமிழ் கால்நடை மருத்துவம் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12. தமிழ்நாட்டில் அழிந்துவரும் எருமை வளர்ப்பை மீட்டெடுக்க எருமைப் பாலுக்குச் சிறப்புக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
13. மேய்ச்சல் வலசை வழித்தடங்களில் உள்ள நெடுஞ்சாலை, தொடர்வண்டி பாதைகளில் மேய்ச்சலுக்காக சுரங்கப் பாதைகளை உருவாக்கிட வேண்டும்.

14. மேய்ச்சல் சமூக மக்களுக்கு அரசு தனியாக அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு இலவச காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
15. கால்நடைத்துறையில் மேய்ச்சல் கால்நடைகளுக்கு எனத் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்.