
சமீபத்தில் தமிழகத்தையே அதிர வைத்த காவல்துறையினரின் சித்திரவதையால் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் நடந்த ஆர்பாட்டாத்தில் கலந்துகொள்ள வந்த சீமான், அதற்கு முன் அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று, படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி ஒருஙகிணைப்பாளர் சீமான், தன் தாயார் மூலம் அஜித்குமாரின் தாயாருக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது சீமானின் தாயார் அன்னம்மாள், அஜித்தின் தாயார் மாலதியை கட்டியணைத்து அழுதபடி ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஒரு இளைஞனை போலீசார் அடித்தே கொலை செய்துள்ளனர். புகார் அளித்த நிகிதா மீது பல மோசடிப்புகார்கள் இருந்தும் அவரை ஏன் கைது செய்யவில்லை? நிகிதாவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. உத்தரவு பிறப்பித்த அந்த உயர் அதிகாரி யார்? அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

மாநில சுயாட்சி என்று மாநில உரிமை பேசும் முதல்வர் ஏன் வழக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.ஐ-யிடம் கொடுத்தார்? முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? முதல்வர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா?
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றியுள்ளார். யார் அடிக்க சொன்னார்கள் என்பதை அடித்த 5 காவலர்களிடம் விசாரித்தாலே தெரிந்துவிடுமே.
என்ன தவறு செய்தாலும் அதற்கு பணம் கொடுத்து சரிகட்டலாம் என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்” என்றார்.