
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதனை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த விபத்தில் பைலட் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
காவல் துறை தகவல்: “விபத்துக்குள்ளான விமானம் சூரத்கர் விமானப் படை தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் பனோடா கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.25 மணிக்கு விழுந்து நொறுங்கியது. விபத்துப் பகுதியில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முடிந்தபின்னரே உறுதியாகத் தெரியவரும். ராஜல்டேசர், ரத்னாகர் காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் மற்றும் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன” என்று ரத்னாகர் காவல் உயர் அதிகாரி தெரிவித்தார்.