
அதிமுக உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்த நாள் முதல் வார்த்தைக்கு வார்த்தை ‘கூட்டணி ஆட்சி’ என்று சொல்லிவரும் பாஜக-வின் பேச்சு அதிமுக-வினரின் வயிற்றில் இப்போதே புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக இதற்கு முன்பும் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், அப்போதெல்லாம் கொடுத்ததை பெற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடு இருந்தது பாஜக. ஆனால் இப்போது, கேட்பதை கொடுக்கவைக்கும் முடிவோடு அணி சேர்ந்துள்ளார்கள். அந்த நினைப்பில் தான், கூட்டணி உறுதியானதுமே ‘கூட்டணி ஆட்சி’ என நெருப்பை பற்றவைத்தார் அமித் ஷா.
கூட்டணி ஆட்சி என்ற பாஜக-வின் பேச்சை அதிமுக-வினர் யாரும் ரசிக்கவில்லை. இபிஎஸ் தொடங்கி கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும், “அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்” என அடித்துச் சொல்கிறார்கள். ஆனாலும், பாஜக தனது ‘கூட்டணி ஆட்சி’ முழக்கத்தைக் கைவிடவே இல்லை. சமீபத்தில் மதுரை வந்தபோதும் அமித் ஷா மீண்டும் இதை உறுதிசெய்துவிட்டுப் போயிருக்கிறார்.