
சென்னை: மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் தலைவர் டி.மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் கள ஊழியர்களுக்கான 32 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதையொட்டி, மின்வாரியத்தில் பயிற்சி முடித்த டிப்ளமோ மற்றும் பி.இ. மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், ஐடிஐ முடித்தவர்களுக்கு மின்வாரியம் மூலமாகவும் தேர்வுகள் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் தேர்வு நடத்தினாலும் சரி, மின்வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.