
கோவை: “2024-25-ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை ரேஸ்கோர்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விசாரணைக் கமிஷன் பற்றி கூறினார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ளது. இதை எதிர்கொள்ளும் விதமாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார்.