
சென்னை அரசியலில் இருந்து மீண்டும் விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின்முறை மாநாட்டில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், “நாடார் சமுதாய மக்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதால் அரசியலில் நாடார் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது” என டச்சிங்காக பேசி இருப்பது ராஜேந்திர பாலாஜி வட்டாரத்தை திகிலுக்குள் தள்ளி இருக்கிறது.
ஜெயலலிதா அமைச்சரவையில் அவரது நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் மாஃபா பாண்டியராஜன். 2016-ல் ஆவடியில் போட்டியிட்டு அமைச்சரான இவர், 2021-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனார். இதையடுத்து சென்னையை விட்டுவிட்டு தனது சொந்த மாவட்டமான விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பினார். இங்கு வந்ததுமே உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகர்மன்ற தேர்தலில் களப்பணியில் இறங்கினார். ஆனால், ராஜேந்திர பாலாஜிக்கு பயந்து பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் பாண்டியராஜனை பார்த்தாலே பயந்து ஓடினார்கள்.
உட்கட்சிக்குள் இப்படியான குடைச்சல்கள் இருந்தாலும் 2024 மக்களவை தேர்தலில் விருதுநகரில் போட்டியிட விரும்பினார் பாண்டியராஜன். ஆனால், சமயம் பார்த்து தொகுதியை தேமுதிக-வுக்கு தள்ளிவிட்டார் ராஜேந்திர பாலாஜி. இதையடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிடலாம் என பாண்டியராஜனுக்கு சமாதானம் சொன்னது அதிமுக தலைமை.