
Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்கள் அவசியம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா… மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியோ எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், ஆயுள் முழுக்க அதை நிறுத்த முடியாது, தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம்.
ஒருவரது ரத்தச் சர்க்கரை அளவுக்கேற்பவே நீரிழிவுக்கு மாத்திரைகளையோ, இன்சுலினையோ மருத்துவர்கள் பரிந்துரைப்போம். ரத்தச் சர்க்கரை அளவு எக்குத்தப்பாக எகிறியிருந்தாலோ, உணவுப்பழக்கம் சரியாக இல்லாவிட்டாலோ, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
அதுவே உணவுப்பழக்கத்தைச் சரியாகப் பின்பற்றி, உடற்பயிற்சிகள் செய்து, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், அவர்கள் ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரை அளவுகளைக் குறைத்துவிடலாம்.
சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுக்க ஆரம்பித்தால் காலம் முழுக்க தொடர்ந்தாக வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. அதே சமயம், 3 மாதங்களுக்கொரு முறை ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்த்து அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இன்சுலினை பொறுத்தவரை, மருத்துவர் எதற்காக அதைப் பரிந்துரைக்கிறார் என்பது முக்கியம். கர்ப்பகால சர்க்கரைநோய்க்கு இன்சுலின்தான் கொடுக்க வேண்டியிருக்கும். தீவிர இன்ஃபெக்ஷன் ஏற்பட்ட நிலையிலோ, கண்கள், இதயம், கால்களில் தீவிர பாதிப்பு இருந்தாலோ இன்சுலின் கொடுக்கப்படும். கர்ப்ப காலம் முடிந்துவிட்டாலோ, கண்கள், இதயம், கால்களில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து வெளியே வந்துவிட்டலோ, இன்ஃபெக்ஷன் சரியாகிவிட்டாலோ, இன்சுலினை நிறுத்திவிடலாம்.

சிலருக்கு உடலில் இன்சுலின் சுரப்பே இருக்காது. அதாவது நீரிழிவு பாதித்து 20-25 வருடங்கள் ஆன நிலையில் சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரக்காது. எந்த மாத்திரை, மருந்தாலும், இன்சுலினை சுரக்கச் செய்ய முடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் அவர்களுக்கு இன்சுலின்தான் கொடுத்தாக வேண்டும். உடலுக்குள் இன்சுலின் சுரக்காததால், வெளியிலிருந்து இன்சுலின் கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.