• July 6, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரை தலைமையிடமாக கொண்ட மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை உரிமம் பெற்று பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு ஆலை

விதியை மீறி பட்டாசு தயாரிப்பு.

இன்று விடுமுறை நாளிலும் விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உராய்வின் காரணமாக திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக பட்டாசு ஆலையின் அறைகள் வெடித்து சிதற துவங்கியுள்ளது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதில் சுமார் 16 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகியுள்ளது. மேலும் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்ததால் அப்பகுதியே கரும்புகையால் சூழ்ந்து காணப்பட்டது.

தரைமட்டமான அறை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின் மீட்புபணியின் போது சாத்தூர் பனையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவரின் உடல் சிதிலமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ் ராம், ராகேஷ் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிவிபத்தால் ஏற்பட்ட புகை

பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது குறித்து ஆலை உரிமையாளர் கணேசன், மேலாளர், மற்றும் 2 போர்மேன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதில் போர்மேன் லோகநாதனை கைது செய்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் இரண்டு விபத்து.

இதே சாத்தூர் பகுதியில் கடந்த ஜூலை 1ஆம் தேதி சின்னகாமன்பட்டியில் கோகுலேஷ் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *