
என்னதான் காசு கொடுத்து கூட்டம் கூட்டினாலும் வந்த கூட்டத்தை தக்கவைக்க குத்துப் பாட்டுக்கு நடனமாட வைப்பது இப்போது பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஃபேஷனாகி விட்டது. கூட்டத்தை தக்கவைக்கத்தான் அப்படி என்றால் சொந்தக் கட்சியினரை குஷிப்படுத்தவும் ஆபாச நடனம் ஆடவைத்து வலைதளங்களில் வறுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆற்காடு அதிமுக-வினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சிக்கு அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆற்காடு நகரச் செயலாளர் ஜிம் எம்.சங்கர் தடபுடலாகச் செய்திருந்தார். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.