
கோவை: மின்கட்டண உயர்வை திரும்பப் பெறத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கோவை ‘கொடிசியா’ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜேஷ் லுந்த், ‘டீகா’ தலைவர் பிரதீப், டான்சியா துணைத் தலைவர் சுருளிவேல், டாக்ட் தலைவர் ஜேம்ஸ், காட்மா தலைவர் சிவக்குமார், லகு உத்யோக் பாரதி மாநில பொதுச் செயலாளர் கல்யாண் சுந்தரம், கொசிமா தலைவர் நடராஜன், சிஐஏ தலைவர் தேவகுமார், கிரில் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரவி, காஸ்மாபேன் தலைவர் சிவசண்முக குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு ஜூலை 1-ம் தேதி முதல் 3.16 சதவீத மின்கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவையில் உள்ள 50 தொழில் அமைப்புகள் மற்றும் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான 35 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மின்கட்டண உயர்வு தொழில்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.