
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை 2 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் ஆங்காங்கே ஓரமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தினமும் 45 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே இத்தடத்தில் கூடுதலாக ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அத்திப்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே 3,4வது பாதை அமைக்க தெற்கு ரயில்வே தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், ரூ.365.42 கோடி மதிப்பிலான 3, 4-வது பாதை பணிக்கான பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.