
திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயது இளம்பெண்ணுக்கும், 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி ஜூலை 1 அன்று உயிரிழந்தார். இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.