
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு பாஜக பகீரத பிரயத்தனம் செய்தது. ஆனால் அண்ணாமலையின் அதிரடிகளால் அதிருப்தி கொண்ட இபிஎஸ், “பாஜக-வுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை” என திட்டவட்டமாக அறிவித்தார். அதிமுக-வின் இந்த முடிவால் உதிரிக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்த பாஜக-வுக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. இதனால் இபிஎஸ் மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் இருந்தார் அமித் ஷா.