
இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘மை விகடன்’ என்ற களம் மூலம் விகடன் வாசகர்கள் தொடர்ந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.
கடந்த மாதம்கூட, பயணக்கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ‘ஒரு கடிதம் எழுதினேன்’ என்ற கட்டுரைப் போட்டி ஒன்றும் நடைபெற்றது.
பிள்ளைகள் பெற்றோர்களுக்கு அனுப்பும் வகையிலும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அனுப்பும் வகையிலும் கடிதங்களை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல, Vikatan Play-வில் இயக்குநர் ராம் குறித்தான Quiz போட்டி ஒன்றும் நடைபெற்றது.
இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், இயக்குநர் ராமுடன் இணைந்து ‘பறந்து போ’ படத்தின் சிறப்புக் காட்சியைக் காணலாம் என அறிவித்திருந்தோம்.
ஏராளமான வாசகர்கள் தங்களின் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் நெகிழ்ச்சியான பல கடிதங்களை எழுதியிருந்தனர். இயக்குநர் ராம் தொடர்பாக Vikatan Play-வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பலர் சரியான பதில்களைக் கூறியிருந்தனர்.
வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பலவற்றை இயக்குநர் ராமும் வாசித்தார். பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை எழுதியவர்களுக்காக நேற்றைய தினம் ‘பறந்து போ’ படத்தின் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் தொடங்கி அனைவரும் திரையரங்கத்தை சிரிப்பொலிகளாலும் கைதட்டல்களாலும் நிரம்பச் செய்தனர்.

படம் முடிந்த பிறகு இயக்குநர் ராம் திரைப்படம் தொடர்பாக வாசகர்களுடன் கலந்துரையாடினார். வாசகர்களும் திரைப்படம் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பினர். அதுபோல, அவர்கள் இயக்குநர் ராமுக்காக கவிதைகளையும், கடிதங்களையும் வாசித்தனர்.
அரங்கிலிருந்த குழந்தைகளுக்கு ‘பறந்து போ’ திரைப்படம் மிகவும் நெருக்கமாகிட, இயக்குநர் ராமுக்கு அவர்களும் சூரியகாந்திப் பூ, ஓவியங்கள் என அழகான பரிசுகளையும் வழங்கினர்.