
சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார்’ என்ற செய்தி ஓய்ந்தபாடில்லை. இதன் பின்னணியில் சில அரசியல் விளையாட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். அதாவது, ‘சீனியரை மாற்றுவது லேசான காரியம் இல்லை. அதற்காகப் பொதுக்குழுவையே கூட்ட வேண்டும். அத்துடன் அவரது பின்னால் சமூக வாக்குகள் குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு அது பெரிதும் கை கொடுக்கும்’ என்று முதன்மையானவர் நினைக்கிறாராம்.
அதேநேரத்தில், ‘அவரை மாற்றியே ஆக வேண்டும்’ என்று மேலிட உறவுப் புள்ளி கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறாராம். அதனால்தான், சீனியருக்கு எதிராக மேலிட உறவுப்புள்ளியின் வியூக நிறுவனம் வதந்திகளை கசியவிட்டு வருகிறதாம். ‘கட்சியின் சீனியரை வைத்து அரசியல் செய்வது, கட்சியின் இமேஜுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் தலைமை தலையிட்டு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்கிறார்கள் சீனியர் உடன்பிறப்புகள்!
பூட்டு மாவட்ட உச்ச அதிகாரி, ஆளும் கட்சிக்காரர்களிடமே கட்டிங் வசூலிப்பதாக அவர்மீது புகார்கள் வரிசைகட்டும் நிலையில், இப்போது கனிமவளக் கொள்ளை வசூலும் அதில் சேர்ந்திருக்கிறதாம். மாவட்டத்திலுள்ள இரண்டு ஆற்றுப்படுகைகளிலும் திருட்டு மணல் அள்ளுவதற்கு, உச்ச அதிகாரியின் பெயரைச் சொல்லி ஏகத்திற்கும் வசூல் செய்கிறார்களாம் ‘வரும்படி’ துறை அதிகாரிகள். அதோடு, மாவட்டத்திலுள்ள 82 குவாரிகளிலிருந்தும் மாதம் தோறும் ‘கட்டிங்’ வசூல் செய்யப்படுகிறதாம். இந்த வசூலைப் பார்ப்பதற்கே, துறைவாரியாக சில அதிகாரிகளை ஏஜெண்டுகளாக நியமித்திருக்கிறாராம் அந்த உச்ச அதிகாரி. ‘அவர் வசிக்கும் பங்களா ரொம்பவும் பாரம்பர்யமானது. புனரமைப்பு என்கிற பெயரில், பங்களாவின் சுவர், டைல்ஸ்களையெல்லாம் குதறி எடுத்துவிட்டார்கள். ஏகப்பட்ட மரங்களையும் வெட்டிச் சாய்த்துவிட்டனர். இதிலிலும் ஒரு முறைகேடு நடந்திருக்கிறது’ என்கிறது அதிகாரிகள் வட்டாரம். சம்பந்தப்பட்ட அதிகாரிமீது, மாண்புமிகுக்கள் தரப்பிலிருந்தும், அதிகாரிகள் தரப்பிலிருந்தும் ஏகப்பட்ட புகார்கள் சென்றும், இன்றுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்காததன் மர்மம்தான் யாருக்கும் புரியவில்லை’ என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள்!
‘புது’மை நிறைந்த அண்டை மாநிலத்தில், பெரியளவில் மலர்க் கட்சிக்குள் அரசியல் விளையாட்டு நடக்கிறதாம். தேர்தலுக்கு முன்பு, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் ஆசையைக் காட்டி இழுத்ததுபோல, தொழிலதிபர்களுக்கு நியமனப் பதவி ஆசையைக் காட்டித் தங்கள் பக்கம் இழுத்தது மலர்க் கட்சி. ஆனால் ஆட்சியைப் பிடித்த பிறகு, சொன்னதுபோலப் பதவி கொடுக்க முடியவில்லை. இதனால், தலைமைமீது அதிருப்தி அதிகரிக்கவே, நியமனப் பதவிகளில் இருந்த மலர்க் கட்சியினர் மூன்று பேரை ராஜினாமா செய்யவைத்து, அந்த இடத்துக்குப் புதியவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள். ‘கட்சிக்காக வாழ்நாள் முழுவதும் உழைந்தவர்களை ஓரம்கட்டிவிட்டு, புதியவர்களுக்குப் பதவிகளைக் கொடுப்பது நியாயமா?’ என்று இந்த விவகாரம் கட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தி, தலைமையைத் திண்டாட வைத்துவிட்டதாம். அதை ஓரளவுக்கு சரிசெய்யவே, லிங்கப் புள்ளியை மாநிலத் தலைமையாக்கியிருக்கிறதாம் டெல்லி. மீதமிருப்பவர்களிடம், ‘அடுத்த தேர்தலில் உங்களுக்குதான் எல்லாம்…’ என்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதாம்!
மேற்கு மாவட்டத்திலுள்ள ‘பாறை’ நகராட்சியில், ‘இனிப்பு’ விவகாரத்தில் பிரச்னை ஏற்படவும், சேர்மனுக்கு எதிராக ஆளும்கட்சியின் கவுன்சிலர்களே போர்கொடி உயர்த்திருக்கிறார்கள். ஆனால், மாவட்டத்தைக் கையில் வைத்துள்ள பொறுப்பாளரான மாஜி, இந்தப் பிரச்னையைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம். துறையின் மாண்புமிகு கவனத்துக்கு ‘இனிப்பு’ விவகாரப் பஞ்சாயத்தைக் கொண்டுபோயிருக்கிறார்கள் சில நிர்வாகிகள். ‘இந்தப் பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வராது…’ என அவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமலேயே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லிவிட்டாராம். மாவட்டப் பொறுப்பாளரும் துறை மாண்புமிகுவும் கைவிரித்துவிட்டதால், தங்களுக்கு எதிராக இருக்கும் கவுன்சிலர்களை அழைத்து ‘பேரம்’ பேசிவருகிறதாம் சேர்மன் தரப்பு!
உப்பு மாவட்டத்தில், உடன்பிறந்தவரின் அடாவடியால் கட்சிக்குள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தார் ‘ஓட்டம்’ தொகுதியின் மக்கள் பிரதிநிதி. நில அபகரிப்புப் புகார்களும் அந்த உடன்பிறப்புமீது வரிசைக்கட்டவே, அவருடனான பழக்கவழக்கத்தை கட் செய்யச் சொல்லி, மக்கள் பிரதிநிதிக்கு உத்தரவிட்டிருந்தார் மண்டலப் பொறுப்பாளர். அதைத் தொடர்ந்து, ‘அண்ணனை ஓரம் கட்டிவிட்டேன்… இனி தவறு நடக்காது…’ எனத் தலைமையிடமும் எழுதிக்கொடுத்தார் அந்த மக்கள் பிரதிநிதி. ஆனால், அடுத்த தேர்தலுக்கு சீட் கிடைத்தால், செலவுக்கு என்ன செய்வது என்று எண்ணிய அந்தப் பிரதிநிதி, அண்ணனுக்கு மறைமுக ஆதரவு கொடுத்துவருகிறாராம். தம்பியின் ஆதரவு மீண்டும் கிடைத்துவிட்டதால், மீண்டும் அடாவடி ஆட்டத்தை தொடங்கியுள்ளாராம் அண்ணன்!