• July 3, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை காவல் மரணம் – ஹென்றி திபேன்

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பது வீடியோதான். இந்நிலையில், அஜித்குமாரை தாக்கும் அந்த வீடியோவை எடுத்த முக்கிய சாட்சியான சத்தீஸ்வரன் என்பவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரபரப்புக் கிளம்பியிருக்கிறது.

இதுதொடர்பாக டிஜிபியிடம் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்புக் கோரி (witness protection) மனு கொடுத்திருக்கும் சத்தீஸ்வரன், “இந்த வழக்கில் S. ராஜா என்ற தனிப்படைகாவலர் கடந்த காலங்களில் சரித்திர குற்றப்பின்னணி உடைய ரவுடிகளுடன் நேரடியாக நெருங்கிய தொடர்பு கொண்டவர்;

சத்தீஸ்வரனின் கடிதம்

அஜித்குமாரின் ‘Torture Footage’ எடுத்து நீதிமன்றதில் வழங்கிய காரணத்தால் எனக்கும், என்னைச் சார்ந்தோரின் உயிர் – உடமைக்குக் கடும் அச்சுறுத்தல் உள்ள காரணத்தால் இவ்வழக்கில் சாட்சியாக இருக்கும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் நீதிமன்ற உத்திரவின்படி ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது அவசியமானதாகும்.” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜா என்பவர் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *