
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக திமுக பெண் நிர்வாகி மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை காரியநாயனார் தெரு எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி சாவித்திரி ( 67). வீட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் சதீஷ்குமார் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். சதீஷ்குமாருக்கு திருநெல்வேலி மாநகராட்சியில் எலக்ட்ரீஷியன் வேலை வாங்கி தருவதாக கூறி சாவித்திரியிடம் பாளையங்கோட்டையில் வசித்து வரும் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பெண் நிர்வாகி ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாவித்திரி புகார் மனு அளித்தார்.