
பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 2025 அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (special intensive revision) நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல் ரீதியாக பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பீகாரில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நடந்த கூட்டத்தில் பேசிய பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்கும் நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இல்லையென்றால் குடியுரிமையும், அரசு மானியத்திற்கான உரிமையை இழப்பீர்கள்.
2024 மக்களவைத் தேர்தலில், சரண் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ராஜீவ் பிரதாப் ரூடி அப்போதே தேர்தல் பொறுப்பாளர்களிடம், ‘2019 தேர்தலை விட உங்கள் வாக்குச் சாவடிகளில் அதிக வாக்குகளை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த தேர்தலுக்கு முன்பு நமக்கு எதிரான 80,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆர்.ஜே.டி வாக்காளர்கள்.’ என 80,000-க்கும் மேற்பட்ட எனது (முஸ்லீம் மற்றும் யாதவ்) வாக்குகளால்” அதிர்ச்சியடைந்தார். எனக் குறிப்பிட்டிரு பேசியிருக்கிறார்.
நேபாளம், வங்காளம், வங்கதேசத்தை எல்லையாகக் கொண்ட முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் சீமாஞ்சல் பகுதியில், 2024 மக்களவைத் தேர்தலில் நான்கு இடங்களில் மூன்றை பா.ஜ.க தலைமையிலான கூட்டணி இழந்தது. அதனால், ஆளும் பாஜக அரசு நாட்டுக்குள் பிறநாட்டினரின் ஊடுருவல் அதிகரித்ததாகவும், அவர்களாலேயே மூன்று இடங்களை இழந்ததாகக் கூறியது.
இது தொடர்பாக பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் ரஞ்சன் படேல், “வாக்காளர் பட்டியலைத் திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லையா? வாக்காளர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், வாக்காளர்களை நீக்குவதற்கே இது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய பீகாரின் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி சுதிர் ராகேஷ், “வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல. இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்திருக்க வேண்டிய ஒரு சாதாரண செயல்முறை. ஆனால், இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது நடப்பதுதான் சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது” என்றார்.