
தஞ்சாவூர், தென் கீழ் அலங்கம், பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வந்த பெரம்லுார் போலீஸார் சரவணனை வேனில் அழைத்து சென்றனர். அப்போது, சரவணனிடம் திருட்டு நகை 20 சவரனை கொடுத்தால், விட்டு விடுவதாக கூறியுள்ளனர். அதற்கு அவர் நான் யாரிடமும் நகை வாங்க வில்லை என்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த வணிகர் சங்க நிர்வாகிகள், போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் வணிகர் சங்க நிர்வாகிகளை கீழே தள்ளி விட்டு சரவணனை இழுத்து சென்றனர்.
இதை கண்டித்து அப்போது வணிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதே போல் கும்பகோணம் பகுதிகளிலும் இரண்டு நகை வியாபாரிகள் திருட்டு நகையை வாங்கியதாக போலீஸார் கைது செய்தனர். போலீஸின் இந்த செயலை கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு வணிகர் சங்க மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகை வியாபாரிகள் சம்மேளன மாநிலத் தலைவர் சபரிநாதன், நகை ஏலதாரர் நலச்சங்க மாநில தலைவர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், திருட்டு நகையை வாங்குவதாக, நகை வியாபாரிகளை அவமதிக்கும் போலீஸாரை கண்டித்தும், நகை வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருட்டு வழக்கில் போலீஸாரின் செயலை வரைமுறைப்டுத்த வேண்டும், நகைக் கடை வியாபாரிகளுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த வாரம் திருட்டு நகையை பறிமுதல் செய்ய வந்திருக்கிறோம் என்ற பெயரில், தஞ்சை மாநகரத் தலைவர் வாசுதேவனிடம் பெரம்பலூர் போலீஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு, சாலையில் தள்ளி விட்டு கொடுஞ்செயலை செய்துள்ளனர்.
போலீஸ் ஏதாவது ஒரு குற்றவாளியை பிடித்து வைத்து கொண்டு, இந்த கடையில் நகையை கொடுத்தேன் என சொல்ல சொல்லி, கடைகளில் நகைகளை பறிமுதல் செய்கின்றனர். குற்றவாளி சொல்வதை வைத்து தான் நாங்கள் வழக்கை நடத்த முடியும். அதை வைத்து தான் நகையை கைப்பற்ற வந்திருக்கிறோம் என்கிறார்கள். நகையை பறிமுதல் செய்தால் அதற்கான ரசீது கொடுக்க வேண்டும். இதை எந்த போலீஸாரும் செய்வதில்லை. ஒரு திருட்டு வழக்கிற்கு பல வியாபாரிகளிடம் நகையை பறித்து குற்றபிரிவு ஆய்வாளர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். இதையெல்லாம் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.