• July 1, 2025
  • NewsEditor
  • 0

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

காவல்துறையின் இந்த எதேச்சதிகார போக்குக்கெதிராக கடுமையான கண்டனங்களுக்கும், திமுக அரசின்மீது கடும் விமர்சனங்களுக்கும் இச்சம்பவம் வழிவகுத்திருக்கிறது.

இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு இதில் சம்பந்தப்பட்ட போலீஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்

மேலும், இவ்வழக்கில் காவல்துறையை மதுரை உயர் நீதிமன்ற கிளை சரமாரியாகக் கேள்வியெழுப்பியது.

மறுபக்கம், ஜெய்பீம் படம் பார்த்து சினிமா ரிவ்யூ எழுதியவர் இப்போது எங்கே போய்விட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வியெழுப்பினர்.

இவ்வாறிருக்க, அமைச்சர் பெரியகருப்பன் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று அவரின் தாய் மற்றும் சகோதரரிடம் ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

அப்போது, அஜித்குமாரின் தாயாரிடம் செல்போனில் பேசிய ஸ்டாலின், “ரொம்ப சாரிமா… தைரியமா இருங்க. சீரியஸாக நடவடிக்கை சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ செய்துகொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் பார்த்துக்கொள்வார்” என்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், அஜித்குமாரின் தம்பியிடம் பேசிய ஸ்டாலின், “நடக்கக் கூடாதது நடந்துவிட்டது தைரியமாக இருங்க.

நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன். என்ன உதவி வேண்டுமோ அமைச்சரிடம் செய்ய சொல்லியிருக்கிறேன்.

தவறு நடந்துவிட்டது. எல்லோரையும் கைதுபண்ணியிருக்கிறோம். இதை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது. என்ன தண்டனை வாங்கி கொடுக்க முடியுமோ வாங்கிக் கொடுத்திடுறேன்.” என்று கூறினார்.

இவ்வாறு பேசியதை வீடியோவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஸ்டாலின், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!

கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *