
மதுரை / திருப்புவனம்: சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது அவர்கள், “மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கோயில் காவலரான அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அவர் உயிரிழந்தார்.