
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவுக்கான மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு வருபவர்களுக்கு இதய பிரிவு சிகிச்சைக்கான மருத்துவர்கள் இல்லாததால் மற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் டயாலிஸிஸ், கண், காது மற்றும் மூக்கு தொண்டை, குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வரும் நிலையில், இதய சிகிச்சை பிரிவுக்கு கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உரிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.