
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தென் மேற்கு பருவ மழையின் காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் அங்கிருந்து அதிக அளவு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 25 ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
அன்றைய தினம் 112 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் 92 ஆண்டுகால வரலாற்றில் 44-வது ஆண்டாக முழு கொள்ளவான 120 அடியை எட்டி உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, டிசம்பர் 31 ஆம் தேதி என மூன்று முறை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
நடப்பாண்டில் முதல் முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணையின் இடது கரையில் 16 கண் பாலம் அருகே நீர்வளத்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து காவிரி அன்னையை வழிபட்டனர்.
இதனையடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது 4 மதகுகளில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் 12 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.