
சென்னை: எங்கள் கூட்டணி யார் தலைமையில் என்பதை பலமுறை பல விளக்கங்களை அமித் ஷா சொல்லிவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர இருக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் மோடியில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழுவதும் நேற்று ஒலிபரப்பானது. அதன் ஒருபகுதியாக தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
இதையடுத்து, ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க உள்ளது என்ற தவறான தகவலை வேகமாக பரப்பி வருகிறார்கள். மத்திய அரசு அதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்துள்ளது.