
சென்னை: பாமக தலைவர் அன்புமணி திடீர் பயணமாக நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் தாங்கள்தான் உண்மையான பாமக என்று கூறிக் கொள்வதோடு, ஒருவரின் ஆதரவாளரை, மற்றொருவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதும் நியமிப்பதுமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
மேலும் இரு தரப்புக்கும் இடையே கடுமையான சொற்போரும் நடந்து வருகிறது. இந்நிலையில் அன்புமணி திடீர் பயணமாக, நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.