
தெலுங்கானா எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) மாணவர் பிரிவு, நேற்று பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் அலுவலகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான செய்தியில், 2014 முதல் 10 ஆண்டுகள் தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த BRS அரசாங்கம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மகேஷ் குமார் கவுட், முந்தைய ஆட்சி தனது தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக ஹைதராபாத் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கை தெலுங்கானா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் BRS தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், BRS செயல் தலைவர் கே.டி. ராமராவ் ஆகியோரை தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் தொடர்புபடுத்தும் செய்தியை உள்ளூர் தொலைக்காட்சி சேனலான மஹா நியூஸ் ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரத் ராஷ்டிர சமிதி (BRS) மாணவர் பிரிவு, நேற்று ஹைதராபாத்தில் உள்ள தொலைக்காட்சி சேனலின் அலுவலகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய காவல்துறை வட்டாரம், “தனியார் செய்தி அலுவலகம் மீதான தாக்குதலில் சுமார் 25-30 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்திருக்கின்றனர். கட்டிடத்தின் கண்ணாடி முகப்பு உடைக்கப்பட்டிருக்கிறது.

கட்டிடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க-வும் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கின்றனர்.
தெலுங்கானா பா.ஜ.க தலைவரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார், “கே.டி.ஆரின் மகன் தலைமையிலான பி.ஆர்.எஸ் குண்டர்கள் மகா நியூஸ் மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது வெறும் ஒரு கட்டிடத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்.
பி.ஆர்.எஸ் எப்போதும் பத்திரிகை சுதந்திரம் பற்றிப் பிரசங்கம் செய்கிறது. இதை இப்படித்தான் வெளிப்படுத்துவீர்களா?” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மஹா நியூஸ் மீதான தாக்குதல் தன்னிச்சையானது மற்றும் தேவையற்றது. தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் மீது காங்கிரஸ் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனக் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.

K T ராமராவ் தன் எக்ஸ் பக்கத்தில், “BRS கட்சி காழ்ப்புணர்ச்சியை ஆதரிக்கவில்லை. அதேநேரம் பத்திரிகை என்ற போர்வையில் போலி செய்திகளை ஒளிபரப்புபவர்களை ஊக்குவிக்கக்கூடாது” எனத் தெரிவித்திருக்கிறார்.