• June 29, 2025
  • NewsEditor
  • 0

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை மிகவும் பிரபலம். இந்த ரதயாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு. இந்த ரதயாத்திரையின் போது பூரி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு ரதயாத்திரை கடந்த 27ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் இந்த ரதயாத்திரை நடைபெறும். 7 நாட்களும் ரதயாத்திரையை கண்டு தரிசிக்கும் பக்தர்கள் இறந்த பிறகு நேரடியாக வைகுண்டத்திற்குச் செல்வார்கள் என்று என்பது ஐதீகம். இன்று காலை 4 மணிக்கு ரதம் குண்டிச்சா கோயில் அருகில் வந்தது. அங்கு அதிகாலையில் ஜெகன் நாதரை தரிசிப்பதற்காக பல ஆயிரம் பக்தர்கள் கூடியிருந்தனர். ரதம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருந்தது. அந்நேரம் மரக்கம்புகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரி கூட்டத்திற்குள் வந்தது.

அந்நேரம் போலீஸாரும் சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர். லாரி ரதம் அருகில் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உடனே பக்தர்கள் முண்டியத்துக்கொண்டு ஓடினர். இதனால் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். சிலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பக்தர்கள் ஏறிச்சென்றனர். இதில் 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 50 பேர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதோடு வி.ஐ.பி.க்களுக்கு சிறப்பு வழியை ஏற்படுத்தி விட்டு பக்தர்களை வழிபடவிடாமல் நீண்ட தூரத்தில் நிறுத்தி வெளியில் அனுப்பி விடுவதாக ஸ்வாதின் குமார் என்ற பக்தர் குற்றம் சாட்டினார். அதோடு அதிகாரிகள் போக்குவரத்தையும் சரியாக ஒழுங்குபடுத்தவில்லை. ரதம் சென்ற வழித்தடத்தில் இதர வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். தற்போது நடந்துள்ள கூட்ட நெரிசலுக்கு மாநில அரசுதான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *