
சென்னையில் முழுவதும் கருகிய நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல் கிடைக்கிறது. இதே முறையில், மும்பையில் தன்னுடைய மகளை இழந்த போலீஸ் அதிகாரி துருவ் (விஜய் ஆண்டனி), சென்னைக்கு வந்து விசாரணையில் இறங்குகிறார். விசாரணை வளையத்துக்குள் தமிழரசன் (அஜய் திஷான்) வருகிறார். ஆனால், அவருக்கு இருக்கும் அதீத ஞாபகசக்தி மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து கதைக்குள் நிகழும் திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை.
இளம் பெண்ணின் நிறத்தை மாற்றிக் கொலை செய்யும் தொடக்கக் காட்சிகள் மற்றும் விசாரணைகள் மூலம் கதைக்குள் இழுத்துச் செல்ல வைக்கிறார் இயக்குநர், லியோ ஜான் பால். ஆனால், அஜய் திஷான் விசாரணைக்குள் வருவதும் அவர் தொடர்பான காட்சிகளும் படத்தை மெதுவாகக் கடத்துகின்றன. அதே நேரத்தில் அவருடைய நீச்சல் திறமையைக் கொண்டு குற்றத்தின் முடிச்சுகளை அவிழ்க்க இயக்குநர் கையாண்டிருக்கும் விதம் ரசிக்க வைத்தாலும் சித்தர்களின் சக்தி என்று ஃபேன்டஸி ரகமாக திரைக்கதை நகரத் தொடங்கி விடுவது ரசனையை குறைக்கிறது.