
வரும் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தங்களது கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. திமுக கூட்டணியில் அவர் நினைப்பது சாத்தியப்படுமா என்று தெரியாத நிலையில், கோவையில் இம்முறை தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என மதிமுக-வினர் உரிமைக் கொடி தூக்கி இருக்கிறார்கள்.
பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள கோவை மாவட்டத்தில் மதிமுக-வுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு. இப்போதும் வைகோ கோவைக்கு வந்தால் விமான நிலையத்தில் திரளும் தொண்டர்களே அதற்கு சாட்சி. மதிமுக-வை வைகோ தொடங்கிய போது அவருக்கு பின்னால் நின்ற தளகர்த்தர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் உள்ளிட்டோர் இப்பகுதியைச் சேர்ந்தவர்களே. இத்தனை இருந்தாலும் கோவை பகுதியில் போட்டியிட மதிமுக பெரிதாக மெனக்கிட்டது இல்லை.