• June 28, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வாழ்வு முழுக்க ‘ஒருக்காலும் உன்ன மாதிரி இருந்துவிடவே கூடாதென’ உன் மீதான வெறுப்பையும், கோபத்தையும் ஆற்றாமையும் சுமந்து கொண்டு திக்கு தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கொண்டே இருக்கிறேன்.

எந்த தாயிக்கும் பிள்ளைக்கும் நடக்க கூடாத நிறைய்ய நமக்குள் நிகழ்ந்திருக்கிறது. நம்மிருவருக்குமான அன்புக்கூட எத்தனையோ முறை நம்மிடம் மன்றாடியிருக்கிறது இருவரும் எதுக்கும் சளைக்காமல் போரிட்டுக்கொண்டே இருக்கிறோம் இன்னமும்…

எத்தனையோ முறை ‘ பிள்ளையை வளர்க்க தெரியலன்னா எதுக்கு பெத்துக்கிடுதீங்கன்னு’ உங்க முன்னால் கத்தி ஏசியிருக்கேன்.

நம்மை சுற்றியிருக்கும் உறவுகளிடம் நீ கொண்டிருக்கும் அளப்பறியான அன்பும், விட்டுக்கொடுத்தலுமே உன்னை நிறைய நிறைய வெறுக்க வைத்திருக்கிறது.

ஆனால், இந்த பெருநகரத்தின நீண்ட சாலையில் தனியொரு ஆளாய் நிற்கும் போதெல்லாம் எல்லோரிடமும் நீ காட்டுகிற அந்த அன்பையும் அப்பழுக்கற்ற அந்த சிரிப்பையும் யாராவது தரமாட்டார்களா என ஏங்கியிருக்கிறேன்.

இப்போதும் கூட எல்லாவற்றையும் மறந்து மீண்டும் உனக்குள் பிறந்து உன்னுடைய பீடித்தூள் காம்பும் அந்த சேலை வாசத்துக்குள் படுத்துக்கிடக்க ஆசை இருந்தாலும், சின்ன வயதில் யார் யாரோ உன்னைப்பற்றி பேசிய வார்த்தைகளும் நமக்குள் நடந்த வடுக்களும் திரும்ப திரும்ப என்னை குத்திக்கொண்டே தடுக்கிறது. அந்த வயதில் உன்னைப்பற்றி யாரும் எதுவும் பேசாமல் இருந்திருந்தால் இந்தளவிற்கு உன்னை வெறுத்திறுக்க மாட்டேனோ என்னவோ! ஆனால், அம்மா அந்த பெரிய தவறை என்னிடம் நீ செய்யவே வில்லை.

சித்தரிப்புப் படம்

யார் என்னைப்பற்றி பேசினாலும் நானே தடுத்தப்போதும் கூட யாரோவாக எனக்காக எப்போதும் நின்றிருக்கிறாய் நீ… என்னுடைய சின்ன சந்தோசத்தை கூட நீ பார்க்க கூடாதென என்னுடைய சின்ன சிரிப்பையும் உன்னிடம் காட்டியதில்லை.

உன்னைப்பார்க்கவே, உன் கையை பிடிக்கவே கூசியிருக்கேன். எனக்கு நடந்த எல்லாவற்றுக்கும் நீ தான் காரணமென நம்பி நிறைய தண்டித்திருக்கிறேன்.

“ஏமாவ்” என கூப்பிடுவதைக்கூட நிப்பாட்டியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன் எந்த தாயிக்கும் பிள்ளைக்கும் நிகழக்கூடாத நிறைய நம்மை மீறி நிகழ்கிறது. உன்மீதான வெறுப்புக்கும் வெறுமைக்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது.

தினந்தினம் நான் உருவாக்கிக்கொண்டே இருக்கிறேன் . ஆனால், அதே அளவிற்கு இப்போது உன்னை நேசிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது என நினைக்கிறேன்ம்மா.

உன்னை ஒன்றுமறியதவளாக அப்பாவியாகவே நினைந்திருந்த போது, எல்லாத்தையும் எதிர்கொள்ளும் உன்னுடைய துணிவு வளர வளரத்தான் எனக்கு புரிகிறது. நான் படிப்பதையும், ஊர் சுற்றுவதையும் ஏற்றுக்கொள்ள தெரியாத உன் ஏக்கத்தை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.

நான் எழுதும் ஒவ்வொன்னையும் எழுத்துக்கூட்டி வாசிக்க துடிக்கும் உன்னை பத்தி மட்டுமே பெரும்பாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என உனக்கு தெரியுமா அம்மா? இந்த ஊரை, சமூக கட்டமைப்பை லெப்ட் ஹேண்டில் டீல் பண்ணும் உன்னைப்போல் இல்லாமல் வேறு யாரைப்போல் இருக்கப்போகிறாய் என மனம் அலைபாய்கிறது.

நீயோ மற்றவர்களிடம் ‘ எங்க தாய் அவ இஷ்டப்படிதான் படிச்சா அவளே தான் எல்லாமும் செஞ்சிக்கிட்டா’ என பெருமையாய் சொல்லிக்கொண்டிருக்கிறாய்…

நம்மிருவருக்குமிடையில் இப்போதொரு பட்டாம்பூச்சி பறக்கிறது. அதன் சிறகுகளை நம்மிருவருமே பிடிக்கவில்லை. நம்மீது அமர்ந்து கொண்டிருக்கும் அந்த பட்டாம்பூச்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் அம்மா நீயே சொல்.. இப்போதும் எனக்கு கூச்சமாய் இருக்கிறது. கூச்சத்தோடே சொல்கிறேன் ‘ஏமாவ் லவ்யூ’.

இந்துமதி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *