
இணையத்தள குற்றவாளிகள் நாடு முழுவதும் தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அதோடு பணமோசடி புகாரை காரணம் காட்டி டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தையும் அபகரித்து வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். மும்பை மேற்கு புறநகர் பகுதியில் வசிக்கும் 70 வயது பெண் டாக்டருக்கு கடந்த மே மாதம் 28-ம் தேதி அமித் குமார் என்பவர் போன் செய்து தான் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்தார்.
அதோடு அப்பெண் டாக்டரிடம், “உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டை பயன்படுத்தி பணமோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அப்பெண் டாக்டர் வாட்ஸ் ஆப்பிற்கு தொடர்ச்சியாக மும்பை குற்றப்பிரிவில் இருந்து அனுப்புவது போன்ற மெசேஜ் வந்து கொண்டே இருந்தது.
அப்பெண் டாக்டர் தன்னைப்பற்றிய தகவல்களை அனுப்பும் படி அதில் கேட்கப்பட்டு இருந்தது. பெண் டாக்டரும் அவர்கள் கேட்டபடி தன்னைப்பற்றிய தகவல்களை அனுப்பினார். அதனை தொடர்ந்து வாட்ஸ் ஆப் கால் ஒன்று அப்பெண்ணிற்கு வந்தது.
அதில் பேசிய நபர் தன்னை ஐ.பி.எஸ்.அதிகாரி சமாதான் பவார் என்றும், மும்பை குற்றப்பிரிவில் பணியாற்றுவதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும் ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயல் வீட்டில் ரெய்டு நடத்தியபோது உங்களது பெயரில் ஒரு வங்கி பாஸ்புக்கும், டெபிட் கார்டும் கிடைத்ததாக தெரிவித்தார்.
ஆனால் அதனை பெண் டாக்டர் மறுத்தார். அந்த வங்கிக்கணக்கை பயன்படுத்தி பணமோசடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதற்காக 3 ஆண்டு சிறைக்கு செல்லவேண்டி வரும் என்று தெரிவித்தார்.
அவ்வாறு மிரட்டி பெண் டாக்டரிடமிருந்து வங்கி கணக்கு விபரம் மற்றும் அவரது வங்கி கணக்கில் இருக்கும் பணம் போன்றவற்றை போனில் பேசிய நபர் தெரிந்து கொண்டார்.
இதையடுத்து மும்பை உயர்நீதிமன்றம், அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ மற்றும் ரிசர்வ் பேங்க் தொடர்பான ஆவணங்களை பெண் டாக்டருக்கு அனுப்பினார்.
அதில் அவருடைய பெயர் இருந்தது. அதனை தொடர்ந்து போலீஸ் சீருடையில் வீடியோ காலில் வந்த தியாகி என்பவர் பெண் டாக்டர் மற்றும் அவரது கணவரிடம் பேசினார். அவர்கள் இருவரிடமும் நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அந்த நபர் தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எங்களிடம் பேச வேண்டும் என்றும், கைது செய்யவேண்டிய சூழ்நிலை வரும் என்றும், உங்களது வங்கியில் இருக்கும் பணத்தை ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது என்றும், அப்பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படியும், அதனை திரும்ப கொடுத்துவிடுவோம் என்று அந்த நபர் தெரிவித்தார்.

இதனால் பயத்தில் பெண் டாக்டர் ரூ.3 கோடியை அந்த நபர் தெரிவித்த வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்தார். அது குறித்து அவர்கள் தங்களது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தனர். அந்த உறவினர் இது மோசடி என்று தெரிய வைத்தார்.
அதன் பிறகுதான் பெண் டாக்டரும் அவரது கணவரும் இது குறித்து சைபர் பிரிவில் புகார் செய்தனர். 8 நாள்கள் பெண் டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து வைத்திருந்ததாகவும் சைபர் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இது போன்ற மோசடி விவகாரத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று சைபர் பிரிவு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.