
‘சீமான் செய்தியாளர் சந்திப்பு!’
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார்.
சீமான் பேசியதாவது, ‘தமிழ்க்கடவுள் முருகன் என்கிறீர்கள். பிறகு தமிழில் வழிபாடு செய்வதில் என்ன பிரச்னை? தமிழிலும் வழிபாடு என்கிறீர்களே. கருணாநிதிதான் தமிழ்க்கடவுள் எனச் சொல்வதை இந்த சனம் கேட்டுக் கொண்டு நிற்கிறது.
செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எங்களுடைய முன்னோர்கள் யாரும் மொழியைக் காக்க போராடவில்லையா? கீழடியில் 2 ஏக்கரில் மட்டும் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்கிறீர்களே? 200 ஏக்கர் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டியதுதானே. தமிழர்களின் பெருமை முழுமையாக வெளிவரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் கள்ளுக்கு அனுமதி இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் தடை? கள்ளை அனுமதித்தால் உங்களின் சாராயத் தொழிற்சாலை அடிபடும் என்று பயப்படுகிறீர்கள். ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் மட்டும்தான் போதைப் பொருளை பயன்படுத்தினார்களா? அவர்கள் இருவரும் அப்பாவிகள். இவர்களை கைது செய்ததால் போதைப்பொருள் ஒழிந்துவிடுமா? குற்றத்துக்கான காரணங்களை கண்டறிந்து களையுங்கள்.
மத்திய அரசு இந்த மாநிலத்தின் நில வளத்துக்காகவும் வரிக்காகவும் மட்டும்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க-வில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் ஒரு உள்கட்சி பிரச்னை. செல்வப்பெருந்தகை ராமதாஸ் ஐயாவை சந்தித்ததைப் போல நானும் சந்திப்பேன். அன்புமணியையும் சந்திப்பேன்.

பா.ம.க தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல. வன்னிய மக்களின் உரிமைகளுக்காக உருவான கட்சி. பா.ம.க-வில் ஏற்பட்டிருக்கும் விரிசலை சிமெண்டால் அல்ல, அன்பால் பூசி சரி செய்ய வேண்டும்.” என்றார்.