
சென்னை: "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தேவைப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சிகள் சுதந்திரமாகச் செயல்படவும், குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உதவும் விதமாக உள்ளாட்சிகளின் நிதி நிருவாக அனுமதி வரம்புகளை உயர்த்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிருவாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும், வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பதை ரூ.20 லட்சம் ஆகவும், மாவட்ட ஊராட்சிகளுக்கான அனுமதி வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தி வழங்கிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற ஊக்கமளித்துள்ளார்.