
குரு மித்ரேஷிவா எழுதிய பணவாசம், கருவில் இருந்து குரு வரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, சென்னையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் பொருளாதார நிபுணர் நாகப்பன், ஜோதிடர் வித்யாதரன், தொழிலதிபர் குமரவேல், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மருத்துவர் சொக்கலிங்கம், கல்யாண மாலை மோகன் போன்றோர் முன்னிலையில் மூன்று புத்தகங்களும் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியின் கடைசியில், ஏற்புரை வழங்கிய குரு மித்ரே சிவா பேசும்போது,
“வாழ்த்துரை வழங்கி அமர்ந்திருக்கும் அத்தனைப் பேரும் அவரவர் துறையில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் யாரும் பணத்திற்குப் பின்னாடி போகவில்லை.
அவங்களோட துறையில முழுமையாக ஈடுபட்டு அவங்களுடைய ப்ராசஸ்ல போய்கிட்டே இருந்ததுனால இந்த உச்சத்தை அடைய முடிந்தது .
இதுபோன்ற வாழக்கூடிய அறிஞர்கள் மத்தியில் இந்தப் புத்தகம் வெளிவருவதை நான் ரொம்ப பெருமையாகவும், மகிழ்வாகவும் கருதுகிறேன். இங்கே மேடையில் தெரிவித்ததைப் போன்று பிராப்தம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி ஒரு நிகழ்வுக்கு வர முடியும்.
புத்தகம் எழுதுவதில் இருந்த பயத்தைப் போக்கி இந்தப் புத்தகம் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தது எழுத்தாளர் செல்வேந்திரன் மற்றும் சைலபதி. என்னை எழுத்தாளராக்கிய விகடனுக்குக் கோடான கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். இதே போன்று இன்னுமும் ஏழு புத்தகங்களுக்குக் கரு உள்ளது.

என்னுடைய முதல் புத்தகமே விகடன் போன்ற பெரிய நிறுவனத்தில் இருந்து வெளியில் வருவதே ஒரு பெரிய பாக்கியம். அதற்காக நிர்வாக இயக்குநர் சீனிவாசன் அவர்களுக்கும், ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன் மற்றும் ஆனந்த விகடன் குழுவில் உள்ள அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இந்த ஆன்மீகத்தில் கிட்டத்தட்ட 30, 35 வருடங்களாக இருக்கிறேன். பல குருமார்களோட பல நாட்கள் பயணித்திருக்கிறேன். இன்னைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை குருமார்கள் கூடவும் நான் இருந்திருக்கிறேன். எல்லாருக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியும் நான் தெரிவிக்கிறேன்” என்றார்.