
திருப்பதி: ஜூலை 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஹைதராபாத், கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து ஸ்ரீசைலம், ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதி, கானிப்பாக்கம் விநாயகர் கோயில் வழியாக வேலூர் பொற்கோயில் மற்றும் திருவண்ணாமலை வந்தடைகின்றனர். பின்னர் கிரிவலம் செல்வதோடு, சுவாமியை தரிசித்து விட்டு ஊர் திரும்புகின்றனர்.
பக்தர்களின் நலன் கருதி ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை வழியாக கன்னியாகுமரி வரை 8 சிறப்பு ரயில்களை இயக்க தென் மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.