
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் குத்தாட்டம் ஆடிய, கோயிலுக்கு வரும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள மூவர் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி திட்டத்தில் வந்தவர்கள் என்று, சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருவதாக தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் ஆடுகின்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து அர்ச்சகர்கள் மது அருந்துவதாகவும், அர்ச்சகர் கோமதி விநாயகம் அவருடைய வீட்டில் மது அருந்தி ஆபாசமாக ஆடுவது, கோயிலுக்கு வரும் சில பெண்களிடம் திருநீரை மொத்தமாக அவர்களது முகத்தில் போட்டு அத்துமீறி நடந்து கொள்வது என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்கண்ட அர்ச்சகர்களின் செயல் கடும் கண்டனம் மற்றும் நடவடிக்கைக்கு உரியது. ஆனால், இப்பிரச்னையை மடைமாற்றும் விதமாக, இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் குற்றம் செய்த அர்ச்சகர்கள், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அப்பட்டமான பொய்யை சமூக வளைதளங்களில் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.
உண்மையில், சம்மந்தப்பட்ட அர்ச்சகர்கள், ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி வலியுறுத்தும் பாரம்பரிய வழக்கப்படி நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். மூவரும், அரசு அர்ச்சகர் பள்ளியில் படிக்கவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நடத்தும் அர்ச்சகர் பள்ளியில் படித்தவர்கள்.
உண்மை இவ்வாறிருக்க, அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகக் கூடாதெனப் பிரசாரம் செய்யும் இந்து முன்னணியினர் இது குறித்து பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசக் கூடாதென நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றது. இதன் காரணமாக அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை இழிவுபடுத்த பொய்யைப் பரப்புகின்றனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் மீது புகார் எழுந்தபோது, கொலை வழக்கில் கைதானபோது இந்து முன்னணியினர் எங்கே போனார்கள்? ஈஷா மையத்தில் ஜக்கி வாசுதேவ், சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை விடுதியாக மாற்றியபோது, காஞ்சிபுரத்தில் கருவறையில் தேவநாதன் என்பவர் பாலியல் ரீதியாக நடந்துகொண்டபோது, உண்டியலில் திருடும் குறிப்பிட்ட அர்ச்சர்கள் என நடந்த சம்பவங்களுக்கு இவர்கள் கேள்வி எழுப்பினார்களா?
எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீதும், திராவிட அரசின் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம். பொய்ச்செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பும் இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.