
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 2000-ல் அப்போதைய சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த உழவர் சந்தை 25-வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் குளிர் பதன சேமிப்புக் கிடங்கு வசதி இருந்தும் விவசாயிகள் வெளிச்சந்தையில் இடைத்தரகர்களிடம் குறைவான விலைக்கு விளை பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காகவும், வெளிச்சந்தையில் இடைத்தரகர்களுக்கு குறைந்த விலைக்கு பொருட்களை விற்று கமிஷன் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் கடந்த 1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. இதில் இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகள் நேரடி வர்த்தகம் செய்வதால் விளை பொருட்களை நியாயமான விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது.