• June 27, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கூமாப்பட்டியின் பிளவக்கல் அணை பகுதி பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “கூமப்பட்டி செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தவறவிடக்கூடாத இன்னும் சில இடங்களை நாங்கள் சொல்கிறோம். மூடுபனி நிறைந்த மலைகள், மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகள், அமைதியான சிறிய நகரங்கள் என அனைத்தையும் குறுகிய பயண தூரத்தில் பார்க்கமுடியும்” என்று சில சுற்றுலா இடங்களை பரிந்துரைத்துள்ளது.

மேகமலை

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள மேகமலை பல ரகசிய இடங்களை மறைத்து வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

எழில் கொஞ்சும் இயற்கையை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் மேகமலை சரியான தேர்வாக இருக்கும். மலையேற்றம் செய்து அழகிய நீரோடைகள், பசுமையான மலை என பல இடங்களை பார்க்கலாம்.

போடிமெட்டு

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிமெட்டு, ஏலக்காய் பயிரிடுவதற்கு முதன்மையான பகுதியாக அறியப்படுகிறது. பூப்பாறையிலிருந்து 10 கி.மீ தொலைவில், போடிநாயக்கனூர் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 85 -ல் அமைந்துள்ள போடிமெட்டு, 17 ஹேர்பின் வளைவுகளைக் கொண்டுள்ளது.

இது ஒரு சிறந்த பிக்னிக் ஸ்பாட் என்றே சொல்லலாம். பிரமிக்க வைக்கும் மலை காட்சிகளையும், இனிமையான காலநிலையையும் பார்வையாளர்களுக்கு போடிமெட்டு வழங்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பார்வையாளர்கள் தங்குவதற்கு புதிய ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்டேகள் வந்துள்ளன.

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி.

இங்கு மூலிகை மரங்கள் அதிகம் காணப்படுவதால் அருவிக்கு வரும் தண்ணீரானது மூலிகை தண்ணீராக வருகின்றன. இதனால் இங்கு நீராடும் பயணிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இங்கு தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை. இந்த அருவியின் அருகே வன தெய்வ கோயில்கள் மட்டுமே உள்ளன.

குரங்கணி டாப் ஸ்டேஷன்

போடிநாயக்கனூர் நகரில் அமைந்துள்ள குரங்கணி டாப் ஸ்டேஷன் மலையேற்றம் செய்வதற்கு பிரபலமாக உள்ளது. இந்த இடம் இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியாகவும், பறவைகள் பார்ப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்காகவும் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது.

சுருளி அருவி

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. இது சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது. இந்த அருவிக்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பருவமழை மழைக்காலங்களில் சுருளி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *