
ராமேஸ்வரத்தில் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம் மற்றும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கச்சத்தீவு மீட்பு மாநாட்டினை நடத்தினர். மீனவர் நலவாரிய உறுப்பினர் சேசு ராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மலைச்சாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டினை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் எம்.அர்ச்சுணன் துவக்கி வைத்தார். டெல்லி விவசாயிகள் போராட்ட குழுவின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் ரஜ்விந்தர் சிங் கோல்டன் சிறப்புரை ஆற்றினார்.
இம்மாநாட்டில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 3,550 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், 706 விசைப்படகுகளையும் சிறைபிடித்தது. இதில் 21 படகுகள் மட்டுமே விடிவிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவினை மீட்க கோரி தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு முதல்வர்கள் தீர்மானம் நிறைவேற்றியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அதேபோல் கச்சத்தீவை திரும்ப பெறுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும் மத்திய அரசு கவனம் காட்டவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்ததுபோல், இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தினையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மீனவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் மீனவர் சங்க நிர்வாகிகள் எமரிட், சகாயம், ஆல்வின், தாஜுதீன், வடுகநாதன் மற்றும் விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஜான் சேவியர், செபாஸ்டியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.