
மகாராஷ்டிரா பள்ளிகளில் நடப்பு ஆண்டு முதல் 1-5வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து மூன்றாவதாக ஒரு மொழி உண்டு என்றும், அதில் இந்தி கட்டாயம் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், வேறு மொழியையும் படிக்கலாம் என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. நடப்பு ஆண்டிலேயே மும்மொழி திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அதற்குறிய பாடப்புத்தகங்கள் இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் 1,2-வது வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியில் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும், பாடப்புத்தகங்களும் கிடையாது என்று மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் தாதாபுஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்து இருந்தார். அதற்கு உத்தவ் தாக்கரேயும் சாதகமாகவே பதில் கொடுத்திருந்தார். இதையடுத்து வரும் மாநகராட்சி தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு இரு தரப்பினரும் சாதகமாகவே பேசி வருகின்றனர். ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக இரு கட்சிகளும் பேச ஆரம்பிக்கவில்லை.
இந்நிலையில் மும்மொழி கொள்ளைக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தாக்கரே சகோதரர்கள் கைகோத்துள்ளனர். மும்பையில் நடைபெறும் பேரணியில் இரு கட்சிகளும் கலந்து கொள்ளும் என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ”இந்தி திணிப்புக்கு எதிராக ஒருங்கிணைந்த பேரணி நடைபெறும்” என்று தெரிவித்து தாக்கரே சகோதரர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இரு கட்சிகள் இணைந்து நடத்தும் பேரணி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ராஜ் தாக்கரே ஏற்கனவே ஜூலை 6ம் தேதி இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், ஆனால் 6ம் தேதிக்கு பதில் 5ம் தேதி இப்போராட்டம் நடைபெறும் என்றும், கிர்காவில் இருந்து ஆசாத் மைதானம் வரை பேரணி நடைபெறும் என்றும் ராஜ் தாக்கரே தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வரும் 7ம் தேதி மும்மொழி கொள்கை எதிர்ப்பு கமிட்டி சார்பாக மும்பையில் நடத்த இருக்கும் பேரணிக்கும் உத்தவ் தாக்கரே ஆதரவு கொடுத்து இருக்கிறார். இதனால் இதில் எந்த பேரணியை இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து நடத்த இருக்கின்றன என்று தெரியவில்லை. உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் பெரியப்பா, சித்தப்பா மகன்கள் ஆவர்.
ஆனால் இப்பேரணியை இரு கட்சிகளும் இணைந்து நடத்தும் பட்சத்தில் இரு கட்சிகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள் வெகுவாக குறைந்து தேர்தல் கூட்டணிக்கு வழிவகுக்கும் என்று இரு கட்சி தொண்டர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மும்மொழித் திட்டம் குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், ”எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது. நாம் இப்போது கற்றுக்கொள்வது தொடர வேண்டும். கல்வி மேம்படுத்தப்பட வேண்டும், ஆனால் சுமையாக இருக்கக் கூடாது. இந்தியை மட்டும் ஏன் திணிக்க வேண்டும்? சுமையைச் சேர்ப்பதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ளதை ஏன் மேம்படுத்தக் கூடாது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரும் இந்தியை கட்டாயமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.