• June 27, 2025
  • NewsEditor
  • 0

‘நிலையான வளர்ச்சி இலக்கு’ (Sustainable Development Goals) குறித்த உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா சபை தற்போது வெளியிட்டுள்ளது. 193 நாடுகள் அடங்கிய அந்தப் பட்டியலில் கடந்த 2024-ம் ஆண்டு 109-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டில் 99-வது இடத்தைப் பிடித்துள்ளது.

போற்றிப் புகழ்ந்து வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றமே! ஆனால், வறுமையின்மை, பசியின்மை, தரமான கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர், பல்லுயிர் பெருக்கம், பாலின பேதமின்மை உள்ளிட்ட 17 அம்சங்கள் அடங்கிய ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இப்போதுதான் 100 இடங்களுக்குள் நுழைந்திருக்கிறோம். எனவே, ‘இது பெருமையா?’ என்கிற கேள்வியும் கூடவே எழத்தான் செய்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் நாடுகள் பலவும்கூட, தரவரிசையில் நம்மைவிடவும் முன்னே இருக்கின்றன. பூடான், நேபாளம், மாலத்தீவுகள் போன்ற சிறிய மற்றும் அண்டை நாடுகளெல்லாம்கூட முன்னேதான். ‘மக்கள் தொகையில் இந்தியா பெரிய நாடாயிற்றே?’ என்று சொல்லியும் நாம் நழுவிவிட முடியாத வகையில், அதிக மக்கள் தொகையுள்ள சீனா, 49-வது இடத்தில் நிலை கொண்டிருக்கிறது.

‘பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா, விரைவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும்… 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்’ என்றெல்லாம் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், நாம் பின்தங்கியிருப்பது சரியல்லதானே? பலவும் இங்கே வெறும் பேச்சோடே நின்றுவிடுவதுதான் பெரும்பிரச்னையே. கிளீன் இந்தியா… ஸ்கில் இந்தியா… என எத்தனை எத்தனை புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள், புதிய துறைகள். ஆனால், ரிசல்ட்? ஆரம்பித்த இடத்திலேயேதான்!

இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள், கழிவுநீர் ஆறுகளாக மாற்றப்பட்டுவிட்டன. நீர்நிலைகளின் தண்ணீர், குடிப்பதற்கல்ல… குளிப்பதற்குக்கூட தகுதியற்றதாகவே இருக்கிறது. காற்றும் நிலமும் மாசுபட்டு சுகாதாரக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தலைநகர் டெல்லியே இதற்கு முதற்சாட்சி!

தரமான கல்வி, சிறப்பான வேலைவாய்ப்பு, உண்மையான மருத்துவம் எனப் பலவும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றன. வறுமையும் பசியும் தான் சுதந்திரம் பெற்ற பிறகும்கூட கோடிக்கணக்கான மக்களைத் தொடர்ந்து வாட்டி வதைத்துக்கொண்டுள்ளன. ‘இந்தியா, பிற நாடுகளைவிட வேகமாக வளர்கிறது’ என்று மார்தட்டிக்கொள்ளும் நாம், அது ‘வளர்ச்சியா… வீக்கமா?’ என்பதை பிரித்தறியத் தெரியாமல் தடுமாறுகிறோம். ஓர் அடி ஏறினால், நான்கடி சறுக்கும் நிலையில்தான் இருக்கிறோம்.

அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப் படுத்தும்போதுதான்… உலக அரங்கில் முதல்வரிசை நமக்கு உத்தரவாதமாகும். இனியாவது, உண்மையிலேயே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண்பதற்கான முயற்சியை உறுதியோடு முன்னெடுப்போம்!

– ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *