
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான டி.எஸ்.ஆர்.வெங்கட்ரமணா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாநிலங்களில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் இவ்வாறு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது சட்ட விரோதம், இது அரசியலமைப்பிற்கு எதிரானது. தேசிய நெடுஞ்சாலை மத்திய அரசின் பட்டியலில் உள்ளது, ஏற்கனவே சாலை பராமரிப்புக்காகப் பல்வேறு வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வேங்கடரமணா, “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில், இது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “தடையற்ற பயணத்திற்காகத்தான், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சுங்க சாவடியிலும் வாகனங்கள் கடந்து செல்வதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதற்கு மாற்று வழி கிடையாதா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.