
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் காலை உணவை சாப்பிட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கான காலை உணவு ஒப்பந்ததாரர் மூலம், காங்கேயத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வேன் மூலமாக இந்தப் பள்ளிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று காலை வழங்கப்பட்ட உணவில் முதற்கட்டமாக 40 மாணவர்கள் உணவருந்தி உள்ளனர். அதில், ஒரு மாணவருக்கு ஊற்றப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்ததும் அருகில் இருந்த 4 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளனர்.
இதையடுத்து, வாந்தி எடுத்து உடல்நலம் குன்றிய சரவணன், சஞ்சித், அமேஷ், வீரராஜ் ஆகிய நான்கு பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களின் உடல்நலன் குறித்து விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில், “வாந்தி எடுத்த மாணவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை.
சாம்பாரில் பல்லி விழுந்தது குறித்து விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன்” என்றார்.
மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.