• June 27, 2025
  • NewsEditor
  • 0

உலக அளவில் வங்கப் புலிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள ஆகிய இந்த மூன்று மாநிலங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக மும்மாநிலங்கள் இணையும் முச்சந்திப்பு வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளன.

இந்தப் பகுதிகளில் புலிகளுக்கான காப்பகங்கள் அமைக்கப்பட்டாலும் வாழிடப் பற்றாக்குறை என்பது புலிகள் காப்பகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

அதேவேளையில் வேட்டை, நஞ்சு கலக்கப்பட்ட கால்நடை சடலங்கள் போன்றவையும் புலிகளின் இறப்புக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.‌ இந்த மூன்று மாநிலங்களிலும் புலிகளின் அசாதாரண இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மர்மமாக இறந்து கிடந்த புலி

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மலே மாதேஸ்வரா வனப்பகுதியில் நேற்று காலை தாய் புலியுடன் 4 குட்டிகளும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை ரோந்து பணியின்‌ போது கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் வனத்துறையின் களப்பணியாளர்கள்.

உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 5 புலிகளின் உடல்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புலிகளின் உடல் பாகங்களை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

5 புலிகளின் இறப்புக்கான காரணம் குறித்து உயர்மட்ட அளவில் தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகள் இறந்த சோகம் குறித்து தெரிவித்த சாம்ராஜ் நகர் வனத்துறையினர், “சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று 4 குட்டிகளை ஈன்று பராமரித்து வந்தது. தாய் மற்றும் 2 வயது மதிக்கத்தக்க 4 குட்டிகளும் அவ்வப்போது எங்களின் கண்களில் தென்படும். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தன. இந்த நிலையில் தான் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இந்த புலிகளால் கொல்லப்பட்ட கால்நடையின் சடலத்தில் விஷம் வைத்து புலிகளைக் கொன்றிருக்கலாம். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் உடற்கூறாய்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றனர்.

மர்மமாக இறந்து கிடந்த புலி

இது குறித்து தெரிவித்துள்ள கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, ” ஒரே நேரத்தில் ஐந்து புலிகள் உயிரிழந்த துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். புலிகளின் இறப்பில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *