• June 27, 2025
  • NewsEditor
  • 0

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றிருந்தார்.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பின்னர் மோடி அரசின் அமைச்சரவையிலிருந்து சீனா சென்றுள்ள முதல் அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

ராஜ்நாத் சிங்

அதற்கான காரணம் குறித்து பேசிய அவர், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஏவப்படுகிறது. குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்.

சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே கொண்டிருக்கின்றன. அத்தகைய நாடுகள் தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன. பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது.” எனத் தெரிவித்து பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எஸ்சிஓ-ன் கூட்டத்தில்பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் சில உறுப்பு நாடுகள் சில விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

ரந்தீர் ஜெய்ஸ்வால்

அதனால், ஆவணத்தை இறுதி செய்ய முடியவில்லை. பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலைகள் ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என்று இந்தியா விரும்பியது. இதனை ஒரு குறிப்பிட்ட நாடு ஏற்க முடியாததாக இருந்தது. எனவே அறிக்கை ஏற்கப்படவில்லை.

பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றி குறிப்பிடாததோடு, பாகிஸ்தானில் நடந்த சம்பவங்களைப் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டதே இந்த கூட்டு பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *