• June 27, 2025
  • NewsEditor
  • 0

கூமாபட்டி… திடீரென தமிழ்நாட்டின் காஷ்மீர் என வைரலான கிராமம். மன அழுத்தமா இங்க வாங்க என ஒருவர் பேசிய வீடியோவை நம்பி இளைஞர்கள் பட்டாளமும் ஒன்று புறப்பட்டது. ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேறு. ஆம், அந்த வீடியோவில் காட்டப்படுவது போல தற்போது அந்த கிராமம் இல்லை எனவும், ஆறுகள் வறண்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. இணையத்தில் பரவுவது பழைய வீடியோவாக இருக்கலாம் எனவும் சொல்கிறார்கள்.

கூமாபட்டியில் கலெக்டர் ஜெயசீலன்

இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், அந்த அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை. சுற்றுலாப்பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது. இந்த நிலையில், தற்போது டிரெண்டிங்கில் உள்ள கூமாபட்டியில் இருந்து விடைபெறும் கலெக்டர் ஜெயசீலன் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவு வைரலாகி உள்ளது.

அதில், “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து… நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள்! எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன். கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர்.

கூமாபட்டி பழைய புகைப்படம்
கூமாபட்டி பழைய புகைப்படம்

பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும். அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து ‌எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை.

தலைவனின் மற்ற தகவல்கள் ‘ரீல்’ஸ்காக மட்டுமே‌! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள‌ இடம். எதிர்காலத்தில் இது‌ கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்! கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *