
கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவை இந்த வழக்கில் சிக்க வைத்தது கெவின் என்பவருடைய வாக்குமூலம் என்கிறார்கள் தனிப்படை போலீஸார்.
யார் இந்த கெவின் என்ற கேள்வியை தனிப்படை போலீஸாரிடம் முன்வைத்து விசாரித்தோம்.
“நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் சம்பவத்தை விசாரித்தபோதுதான் உயர்ரக போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பல் குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைக்கத் தொடங்கின. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.கவின் முன்னாள் நிர்வாகி பிரசாத், சேலம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் மூலம்தான் போதைப் பொருள் விற்பனை கோலிவுட் வரை நடந்திருப்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்தோம். பிரசாத் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் கோகைன் என்ற போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியிருப்பது தெரியவந்ததும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தோம். நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தகவல் காட்டு தீ போல கோலிவுட் வட்டாரத்தில் பரவியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கழுகு படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவும் கோகைன் என்ற போதைப் பொருளை பயன்படுத்திய தகவல் எங்களுக்கு கிடைத்தது.
அதனால் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் சுமார் பத்து மணி நேரத்துக்கு மேல் விசாரித்தோம். விசாரணையில் அவர் தனக்கு உடல் நலம் பாதிப்பு இருப்பதால் போதைப் பொருளை பயன்படுத்தவே இல்லை எனக் கூறினார். இந்தச் சூழலில்தான் சென்னையைச் சேர்ந்த ஜெஸ்வீர் (எ) கெவின் என்பவர் குறித்த தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. இவர் உயர்ரக போதைப் பொருள்களை வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே சப்ளை செய்யும் டீலர் என்ற தகவலும் தெரியவந்தது. மேலும் இவர் மீது சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அதனால் கெவினைப் பிடித்து விசாரித்தோம். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் வி.வி.ஐ.பி-க்களுக்கு உயர்ரக போதைப் பொருளை சப்ளை செய்த தகவல் ஆதாரங்களுடன் சிக்கின. அதில் ஒருவர் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா. இதையடுத்து கெவினிடம் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா குறித்து விசாரித்தோம். அப்போது அவர் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு உயர்ரக போதைப் பொருளை சப்ளை செய்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா, போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினோம். ஆனால் அதில் எங்களுக்கு தேவையான தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து கெவின் அளித்த தகவலின்படி நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவிடம் போதைப் பொருள் வாங்கியது தொடர்பாக விசாரித்தோம். அப்போதும் அவர் எனக்கு கெவின் யாரென்றே தெரியாது என்றுதான் கூறினார். இதையடுத்து கெவினுக்கு நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா தரப்பிலிருந்து போதை பொருள் வாங்கியதற்கான பணம் அனுப்பிய ஆதாரங்கள் மேலும் கெவினில் செல்போனிலிருந்த வாட்ஸ்அப் குரூப்பில் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா போதை பொருள் கேட்டு ஆர்டர் கொடுத்த விவரங்கள் இருந்தன. அதை நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவிடம் காண்பித்து விசாரித்தோம். அப்போது நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா அமைதியாகிவிட்டார். இதையடுத்துதான் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவைக் கைது செய்தோம். அவரின் வீட்டில் நடத்திய சோதனையிலும் எங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைத்தன. கெவினிடம் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா போதைப் பொருள் வாங்கியது உறுதியானதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றனர்.

இந்த வழக்கில் கைதான கெவினின் போதைப் பொருள் நெட்வொர்க் மிகப்பெரியது என்ற அதிர்ச்சி தகவலை நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், “சென்னையைச் சேர்ந்த கெவின், வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே உயர்ரக போதைப் பொருளை ரகசியமாக சப்ளை செய்து வந்திருக்கிறார். இவருக்கு பெங்களூரூவிலிக்கும் சர்வதேச போதைப் பொருள் நெட்வொர்க் கும்பலுடன் நேரிடையாக தொடர்பு இருந்து வருகிறது. அவர்கள் மூலம் பெங்களூருவிலிருந்து உயர்ரக போதைப் பொருளை வாங்கி சென்னை வந்து இங்கு சப்ளை செய்து வந்திருக்கிறார். அதன்மூலம் அதிகளவில் வருமானம் கிடைத்த சமயத்தில்தான் இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான பிரதீப் என்பவருடன் கெவினுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரதீப்தான் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா உள்ளிட்ட சினிமா பிரபலங்களை கெவினுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். கெவின் வீட்டிலிருந்து உயர்ரக போதைப் பொருள்கள், பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தற்போது கெவின் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள வி.வி.ஐ.பி-க்களின் பட்டியலை சேகரித்து அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம். கெவினின் வாட்ஸ்அப் குரூப்பில் கோலிவுட்டில் உள்ள சில முக்கிய பிரபலங்கள் தொடர்ந்து அவரிடம் போதைப் பொருளை வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. விசாரணை புலனாய்வில் இருப்பதால் அவர்களின் விவரங்களை வெளியில் சொல்ல முடியாது” என்றார்.