
புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்பாக, அந்த மாநில வாக்காளர் பட்டியல், தேர்தல் தினத்தன்று பதிவான வீடியோ காட்சிகள் ஆகியவற்றை வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என்று பதில் அளித்து வந்த தேர்தல் ஆணையம், சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. அதில், நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாகவும், தேதி மற்றும் நேரத்தை தெரிவிக்குமாறும் கோரி இருந்தது.